முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது மேடைக்கு மேடை கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் ஷிரந்தி ராஜபக்சவின் ஆபரணங்கள் பற்றிப் பேசியவர்கள், இன்றும் அதே வெறுப்பு அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். 450 கோடி பெறுமதியான வீடுகள், 93,000 கோடி சொத்துக்கள் என இமாலயப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்ற முற்படும் இந்த அரசாங்கம், ஒரு பொய்களின் அரசாங்கம்’ என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஒரு சட்டவிரோதக் கட்டடம் இருந்தால் கூட, இந்த அரசாங்கம் ஒன்றரை வருடங்கள் சும்மா இருக்காது என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த காலங்களில் கூறப்பட்ட லம்போகினி கார்கள், தங்க சங்கிலிகள், ரொக்கெட்டுகள் என அனைத்துமே அப்பட்டமான பொய்கள் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
தற்போதைய மறுமலர்ச்சி அரசாங்கம் தன்னைத் தூய்மையானது எனக் கூறிக்கொண்டாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்ட சம்பவமும், அது தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ளவிருந்த அரச அதிகாரி ஒருவரின் மர்மமான மரணமும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
நீதித்துறையின் சுதந்திரத்தில் இந்த அரசாங்கம் தலையிட முயற்சிக்கிறது. மே தின மேடையில் நீதியமைச்சரும், ஜனாதிபதியும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தமது ஆதரவாளர்களுக்கு வழங்கிய கருத்துக்கள் இதற்குச் சான்றாகும். அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டாம், அனைவரையும் சிறையில் அடைப்போம் என அமைச்சர்கள் கூச்சலிடுவது ஜனநாயக நாடு ஒன்றின் நீதித்துறைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்
நாட்டுக்காக உண்மையாக உழைத்த தலைவர்கள் யார் என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு மீண்டும் மேலோங்கி வருவதைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும். ஏப்ரல் புத்தாண்டு மற்றும் மே தின நிகழ்வுகளில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு மக்கள் வழங்கிய வரவேற்பு இதனை உறுதிப்படுத்துகிறது. தமது தோல்விகளை மறைக்கவே மீண்டும் ஷிரந்தி ராஜபக்ச போன்றவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடத்துகின்றது. இவ்வாறான பொய்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது என தெரிவித்தார்.