கனடா சில்லுவாக் (Chilliwack) பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தகாத கருத்துக்களைத் தெரிவித்ததற்காகக் கண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ‘மரியாதைக்குரிய எல்லைகளைப் பேணுதல்’ (Respectful boundaries) குறித்த பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும் எனத் தொழில்முறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பீட்டர் வில்லியம் ஜென்டைல் (Peter William Gentile) என்ற இந்த ஆசிரியர், தனது நடத்தைக்காக ஆணையத்துடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். 2024/2025 ஆம் கல்வியாண்டில் 5 ஆம் வகுப்பு மாணவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து 7 சம்பவங்கள் இந்த உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தோற்றம் குறித்த கிண்டல்: ஒரு மாணவியிடம் அவர் “உடற்பயிற்சி செய்வது உனக்கு நல்லது” என்று கூறியுள்ளார். மற்றொரு மாணவரிடம், அவரது இரட்டைச் சகோதரர் தான் உங்களை விட அழகாக இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
பெற்றோரின் அனுமதியின்றி கமரா முன்னால் வராத மாணவர் ஒருவரிடம், அவர் வந்தால் “கமரா உடைந்துவிடும்” என்று கிண்டல் செய்துள்ளார்.
மாணவர்கள் பாடத்தைக் கவனிக்காத போது, ‘மட்டில்டா’ திரைப்படத்தில் வரும் ‘சோக்கி’ (Chokey – முட்கள் நிறைந்த அலமாரிக்குள் அடைத்து வைக்கும் தண்டனை) பகுதிக்குச் செல்ல வேண்டுமா எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஒரு மாணவி ஆசிரியரின் பேச்சைக் கேட்காத போது, தனது மடியைத் தட்டிக் காட்டி “தயவுசெய்து இங்கே வந்து என்னைப் பார்” என்று தகாத முறையில் கூறியுள்ளார்.
மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மரக் குச்சியால் மேசைகளை ஓங்கி அடித்துச் சத்தமிட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்காகச் சில்லுவாக் பாடசாலை மாவட்டம், 2025 பெப்ரவரியில் அவருக்கு மூன்று நாட்கள் சம்பளமில்லாத இடைநீக்கம் வழங்கியதுடன், நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவது குறித்த பயிற்சியையும் வழங்கியது.
தற்போது, ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையம் அவரை அதிகாரப்பூர்வமாகக் கண்டித்துள்ளதுடன், ‘மரியாதைக்குரிய தொழில்முறை எல்லைகளை வலுப்படுத்துதல்’ என்ற பாடநெறியை அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனைத் தவறவிட்டால் அவரது ஆசிரியர் சான்றிதழ் இடைநீக்கம் செய்யப்படலாம்.