வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியை ஸார்ப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வடபகுதியில் இதுவரையில் முப்பத்தேழு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்று அறுபத்தியொரு (3 778 161) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்று எழுபது (82170 ) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிதியுதவியுடன் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், 2026 பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தச்சடம்பன், அம்பகாமம், ஒழுமடு, மாங்குளம் மற்றும் கொக்காவில் ஆகிய பகுதியில் இருந்து ஏகப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, மற்றும் இயக்கச்சி ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் முப்பத்தேழு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்று அறுபத்தியொரு (3778 161) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்று எழுபது (82170 ) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தரவுகளை ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம்,மாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.