முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை காப்பாற்றுவதற்கு தீட்டிய திட்டத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.
ஈழப்போரின் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் சரணடையும் விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் காணொளி ஒன்றை பொன்சேகா இன்று (18.02.2026) வெளியிட்டார்.
சரத் பொன்சேகா நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த காணொளியை பகிரங்கப்படுத்தினார்.
அச்சந்தர்ப்பத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ராஜபக்சக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைய ஒத்துக் கொள்ளவில்லை.
அவர்கள் மூன்றாம் தரப்பிடம் சரணடையவே விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இன்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சரணடைந்திருந்தால் ராஜபக்சக்கள் இவர்களை காப்பாற்றி இன்று தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரை வடக்கின் முதலமைச்சராக்கியிருப்பர். அவர்கள் சரணடைய மறுத்ததால் இன்று தேசிய வீரர்கள் போல் பேலி வேசம் காட்டுகின்றனர்.
ஈழப்போரின் இறுதித் தருணத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ஆகியோர் போரை எப்படி நிறுத்துவது என்றே திட்டம் தீட்டினர்.அப்போது நான் சீனாவில் இருந்தேன்.
ஆனால் போரில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொண்டே இருந்தேன். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச, எரிக்சொல்ஹெயிம், ஐ.சி.ஆர்.சி, அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் ஆகியோருடன் பேசி விடுதலைப் புலிகள் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினர்.