நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய, இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை முறையான வழிமுறையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் இதுபோன்ற பேரழிவால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்காக துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது, சுமார் 1,289 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில், சுமார் 44,500 வீடுகள் மண்சரிவு மற்றும் தொடர்புடைய பாதிப்புகளால் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.