பேராதனை ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாலத்தின் நிர்மாணப் பணிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத காரணத்தினால், அது மீண்டும் பழுதடைந்த நிலையை எட்டியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“டித்வா புயலுக்குப் பிறகு தற்போது மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. புகையிரத பாதைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நாளுக்கு நாள் தாமதமாகி வருகின்றன. பேராதனைப் பாலத்தின் பணிகளை ஏப்ரல் 28ஆம் திகதிக்குள் நிறைவு செய்வோம் என அரசாங்கம் திகதி குறித்திருந்தது. ஆனால் தற்போது அதன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆதரவான தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு வேறுவிதமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் உண்மை என்னவென்றால், பாலம் தற்போது மீண்டும் ஒருபுறமாக இழுப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. கண்டியிலிருந்து தினசரி அரச மற்றும் தனியார் துறை வேலைகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக உலப்பனை – நாவலப்பிட்டி இடையே ஒரு புகையிரதம் தரித்து நிற்கிறது. அதனை மிக எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்ற போதிலும், திணைக்களம் அது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.