பிளிங்கிட் செயலியின் மூலம் தடை செய்யப்பட்ட கத்திகள் விற்பனை செய்யப்படுவதால், அந்நிறுவனத்துக்கு எதிராக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தில்லியில், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட 8 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் கொண்ட மடக்கும் வகையிலான கத்திகளை இணையவழியில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இணையவழி வணிக சேவைகளை வழங்கும் தளங்களில் சோதனைச் செய்ததில், அரசு விதிமுறைகளை மீறிய அளவுகளைக் கொண்ட கத்திகள் பிளிங்கிட் நிறுவனத்தின் செயலியில் விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதனால், பிளிங்கிட் நிறுவனத்தின் மீது ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் கடந்த பிப். 14 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தில்லி (மேற்கு) காவல் துணை ஆணையர் தரடே ஷரத் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிளிங்கிட் நிறுவனத்தின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை.
இந்த விவகாரம் குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட கத்திகளை இணையவழியில் விற்பனை செய்த தனிநபர்கள், விநியோகஸ்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்துள்ளனர்.