பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
கடந்த 27 வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக 1999 ஆம் ஆண்டிலிருந்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான சேவைப் பிரமாணக் குறிப்பு இதுவரை இல்லாதது கவலையளிக்கும் விடயமாகவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலும், இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே நாடு தழுவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் சுமார் 1,50,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச சேவையில் கடமையாற்றி வருகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இவர்களுக்கு, தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
கல்வித் தகைமைக்கேற்ப சம்பளக் குறியீடு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்குதல், பயணக் கொடுப்பனவை 2,000 முதல் 2,500 வரை அதிகரித்தல், மற்றும் விசேட தரம் உள்ளடங்கிய பதவி உயர்வு வழங்குதல் ஆகிய பிரதான கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.
அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலையான பெயர் மற்றும் சேவை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும், பதவி உயர்வுக்கான கால எல்லையை 10 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அலுவலகங்கள், சமூகம் மற்றும் வீடுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுயகௌரவமும் மரியாதையும் பாதுகாப்பப்பட வேண்டும் என்றும், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாகாண சபை மற்றும் மத்திய அரசுக்குட்பட்ட 15 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தங்களுக்குரிய உரிய தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.