பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது, அவரை பிணையில் விடுவிப்பதுக்கு போதுமான விசேட சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.
குறித்த பிரதிவாதி பிணை மனுவைத் தாக்கல் செய்யும் போது சுமார் 15 வருட காலம் சிறை வைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் கைது செய்யப்படும் போது 26 வயதுடைய இளைஞனாக இருந்தாரெனவும், வழக்கு விசாரணையை எதிர்பார்த்து அவரது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதி சிறையிலேயே கழிக்க நேரிட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த பயங்கரவாத வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் அல்லது தனுஷ் என்பவருக்கு பிணை வழங்குவதை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை இரத்து செய்தே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பானது நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோரடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை அறிவித்திருந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த பிரதிவாதிக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 குற்றச்சாட்டுகளும், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் 115 குற்றச்சாட்டுகள் என மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் சாட்சியாளர்களாக 106 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிரதிவாதிக்கு 200,000 ரூபா ரொக்கப் பிணை, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகள் விதித்து பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இரு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறும் மற்றும் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்படி பிணை நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பிரதிவாதி கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வயது நிறம்பிய மகள் இருந்ததாகவும் இந்த நீண்டகாலத் தடுப்புக்காவல் காரணமாக, அவரது குடும்பத்தினருக்கு அவரது அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாது போயுள்ளதாகவும் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி அருண மதுசங்கவுடன் சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர முன்னிலையாகியிருந்ததோடு, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.