வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (டிசம்பர் 5) மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி மற்றும் முறாவோடை பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்னர் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரண உதவிகளும் பொருட்களும் வழங்கப்பட்டன. இது அவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது அத்தியாவசிய நிவாரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், நிவாரண உதவிகள் மக்களைச் சென்றடைவதில் கால தாமதம் ஏற்படுவதாகக் அவர் சுட்டிக்காட்டினார்.
நிவாரணங்களை வினைத்திறனாகக் கையாளவும், பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாகச் சென்றடையச் செய்யவும், தொடர்புடைய அரச ஊழியர்களைக் கொண்டு துரிதமான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.