கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர், தனது தினசரி வேலைகளுக்கு மேலதிகமாகச் செய்த வேலைகளுக்கான கொடுப்பனவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து உதவி அத்தியட்சகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அத்தியட்சகரைத் திட்டியதாக கூறி, குறித்த தொழிலாளருக்கு ஏழு நாட்கள் வேலைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வேலைத்தடை விதிக்கப்பட்ட தொழிலாளருக்கு ஆதரவாக ஏனைய தொழிலாளர்கள் இணைந்து தோட்டப் பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். குறித்த தொழிலாளருக்கு விதிக்கப்பட்ட வேலைத்தடையை உடனடியாக நீக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.