தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல், சிறுபான்மை தேசிய இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு சாதகமான நிலை காணப்படுகிறது. வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகை குறைந்திருக்கின்றது.
பொருளாதார வளர்ச்சி வீதமும் காணப்படுகின்றது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. மலைய தொழிலார்கள் நாட்டுக்காக உழைத்தாலும் கூட சம்பளமாக 1350 ரூபாவாக காணப்பட்டது.
எனினும் இந்தமுறை வரவு செலவு திட்டம் ஊடாக 400 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரச செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த கால அரசாங்கங்களின் வரவு செலவு திட்டங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சாதகமானதாகவுள்ளது என்பதை சொல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது.
இதுவொரு பொதுவான பார்வை நாட்டுப்பார்வை. வடக்கு, கிழக்கினைப் பொறுத்தவரையில் யுத்தத்தினால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றவர்கள், தமது சொந்த காணிகளை இழந்து நிற்கின்றவர்கள் என்று பார்க்கும் போது தமிழ் மக்கள் இந்த நாட்டின் பொதுவான பார்வையினை விட விசேடமான பார்வையினை எதிர்பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.