கடந்த வாரம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபருடன் தொடர்புடைய பெருமளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களின் பின்னணியை நுவரெலியா பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
நுவரெலியா தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால், நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விசேட விசாரணை அறிக்கையிலேயே இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 17ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் அறிக்கை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபரின் பின்னணி குறித்துப் பொலிஸார் நடத்திய தேடுதலின் போதே இப்புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
சந்தேகநபர் ஹொரம்பாவ, கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மோசடி நடவடிக்கைகளில் அவரது மனைவிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றியமை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி நிலுவையிலுள்ள சில வழக்கு விபரங்கள் வருமாறு:
-
கம்பஹா மேல் நீதிமன்றம் (வழக்கு இல. B 1893/19): திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 11,873,000 ரூபாய் மோசடி செய்தமை மற்றும் (WP CBG 8532) இலக்கமுடைய மோட்டார் வாகனத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை.
-
அளுத்கடை (Hulftsdorp) நீதவான் நீதிமன்றம் இல. 05 (வழக்கு இல. B 98858/05/2018): திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 1,721,000 ரூபாய் மோசடி செய்தமை.
-
அளுத்கடை நீதவான் நீதிமன்றம் இல. 05 (வழக்கு இல. B 15191/05/2019): திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 1,376,000 ரூபாய் மோசடி செய்தமை.
-
திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் (வழக்கு இல. B 33176, 33174): வாகன இறக்குமதித் தொடர்பில் 2,200,000 ரூபாய் மோசடி செய்தமை.
-
அளுத்கடை நீதிமன்றம் (வழக்கு இல. B 7002/23): வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி 4,200,000 ரூபாய் மோசடி செய்தமை.
சந்தேகநபருக்கு எதிராக அளுத்கடை, ஹொரண மற்றும் கடுவெல உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் மேலதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இதற்கு இணையாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தரவுத்தளங்களைச் சரிபார்த்தபோது, அவர் ஏற்கனவே 2023 நவம்பரில் பேலியகொட பொலிஸாரினாலும் மோசடி விசாரணைப் பிரிவினராலும் மோசடிச் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் திருமணம் சார்ந்த நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரின் மனைவி குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.