திமுக ஊழல் ஆட்சியை அகற்ற கூட்டணியில் ஒன்றாக இணைந்திருப்பதாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.
இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பியூஷ் கோயல்,
“என்டிஏ குடும்பத்துக்கு மீண்டும் வர தினகரன் முடிவு செய்துள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே அவரது திறமை, பங்களிப்பை நான் பார்த்திருக்கிறேன். அன்புமணி, ஜிகே வாசன் ஆகியோரும் கூட்டணியில் இணைந்துள்ளனர். ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
தமிழ் மொழி, கலாசாரம், தமிழர்களின் பெருமைகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது. திமுக ஊழல் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட திமுகவினரின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். தமிழக மக்களின் நலனுக்காக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். ஊழல் திமுக ஆட்சியை என்டிஏ கூட்டணி அகற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டணியை வலுவாக்க தினகரன் எங்களுடன் இணைந்துள்ளார். என்டிஏ ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்று தெரிவித்தார்.