முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பானது தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பு ரீதியிலான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி உரிய விடயங்களை சுயாதீனமாக ஆராய்ந்து பரிசீலிக்கவில்லை என்றும், வெறுமனே பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதிகளான ஜனக் டி சில்வா, கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு வியாழக்கிழமை வழங்கிய ஏகமனதான தீர்ப்பில், 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பை செல்லுபடியற்றது என அறிவித்தது.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதியின் அதிகாரமானது மக்கள் சார்பில் பேணப்படும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாகும் (Public Trust) என்றும், அது அரசியலமைப்பு வரம்புகள் மற்றும் நீதித்துறை மறுாய்வுக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க எடுக்கப்பட்ட முடிவின் முறையே நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதான பிரச்சினையாகும்.
முழுமையான பொதுமன்னிப்பை பரிந்துரைத்து மேலதிக செயலாளர் (சட்டம்) தயாரித்த குறிப்பொன்றை நீதிமன்றம் பரிசீலித்தது. அந்த ஆவணம் பொதுமன்னிப்பு தொடர்பான சட்டப் பிரச்சினைகளைக் கையாண்ட போதிலும், ஞானசார தேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்குவது குறித்து சிறிசேன பரிசீலித்திருக்க வேண்டும் என்பதற்கான எந்தவொரு காரணத்தையும் அது வெளிப்படுத்தவில்லை என்று நீதிபதி ஜனக் டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இந்த பரிந்துரைக்கு சிறிசேன வெறுமனே ஒப்புதல் மட்டுமே அளித்துள்ளார் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியால் தொடர்புடைய கருத்துக்கள் மற்றும் சான்றுகள் உண்மையாகவே பரிசீலிக்கப்பட்டதா என்றும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுமன்னிப்புக்கு எதிரான எதிர்ப்புகள் குறித்து சிறிசேன அறிந்திருந்தாரா என்பது குறித்தும், பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் காணப்பட்ட தீவிர அவசரம் குறித்தும் நீதிமன்றம் வினவியுள்ளது.
தொடர்புடைய ஜனாதிபதி செயலகக் கோப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தனது பிரமாணப் பத்திரத்தில் இவ்விடயங்கள் குறித்து விளக்கமளிக்க சிறிசேனவுக்கு வாய்ப்பு இருந்தபோதிலும், அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மேலதிக செயலாளரின் (சட்டம்) பரிந்துரையின்படி சிறிசேன செயற்பட்டு அடங்கிவிட்டார் என்று தீர்ப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களினாலும், 1(ஏ) பிரதிவாதியால் 5ஆவது பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு தன்னிச்சையானது, பொது நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் இயற்கை நீதியின் விதிகளை மீறுவதாகும், அத்துடன் அவரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது (Ultra Vires)” என்று நீதிபதி டி சில்வா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக, இத்தீர்மானமானது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கண்டறிந்த நீதிமன்றம், அந்தப் பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என்றும் சட்டத்தில் எந்தவொரு வலுவோ அல்லது பயனோ அற்றது என்றும் அறிவித்தது.
2016 ஜனவரியில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டமையுடன் இவ்வழக்கு தொடர்பிலுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் அவரைக் குற்றவாளியாகக் கண்டு, முறையே நான்கு, நான்கு, ஆறு மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், இத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பின்னர் அவர் மே 2019இல் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றார்.
மே 2019இல் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டபோது, ஞானசார தேரர் தனது ஆறு ஆண்டு சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்தார்.
மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் (CPA) மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து ஆகியோரினாலும், காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவினாலும் இந்த பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தனித்தனியாக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஞானசார தேரருக்கு இனி என்ன நடக்கும்?
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பில் முக்கிய சட்ட விளக்கத்தை அளித்த உயர்நீதிமன்றம், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பானது தகுதியான நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையையோ அல்லது தீர்ப்பையோ மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது எனத் தெரிவித்தது. மாறாக, பொதுமன்னிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்கு மட்டுமே அது தண்டனையை நிறைவேற்றுவதிலிருந்து குற்றவாளிக்கு விலக்கு அளிக்கிறது.
தற்போது 2019ஆம் ஆண்டின் பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞானசார தேரர் இனி அந்த மன்னிப்பின் பலனைப் பெற முடியாது. அதேவேளை அவரின் மூலத் தண்டனையும் குற்றவாளி என்ற தீர்ப்பும் சட்டப்படி மாறாமல் உள்ளது.
இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் அவரை உடனடியாகக் கைது செய்யவோ அல்லது மீண்டும் சிறையில் அடைக்கவோ பிரத்யேகமாக உத்தரவிடப்படவில்லை. அத்துடன் மூலத் தண்டனையில் இன்னும் எவ்வளவு காலம் அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதும் கணக்கிடப்படவில்லை.
எனவே, அவரின் தடுப்புக்காவல் மற்றும் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வெளிச்சத்தில் சிறைச்சாலை அதிகாரிகளினாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை, ஜனாதிபதி ஒருவர் ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்குவதை இத்தீர்ப்பு தடுக்காது என்றும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு பொதுமன்னிப்பும் சட்டத்திற்கு அமைவாகவும், ஜனாதிபதியின் முன்வைக்கப்படும் அனைத்து தொடர்புடைய விடயங்களையும் முறையாகப் பரிசீலித்த பின்னருமே வழங்கப்பட முடியும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனிடையே, மேலதிக செயலாளரால் (சட்டம்) வழங்கப்பட்ட சட்டரீதியாக பிழையான வழிகாட்டல்களின் படியே சிறிசேன செயற்பட்டுள்ளார் என்பதை ஆவணங்கள் காட்டுவதைக் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவருக்கு எதிராக மேற்கொண்டு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது.