யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்று இரவு கத்தி முனையில் வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான குழுவினர் இன்று (25) அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.