சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி புதுடில்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தூதரக அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுமாறு தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் மதீனாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், பஸ் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க முடியவில்லை. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணம்.
இந்த விபத்தில் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி அளித்த பேட்டி: தீப்பிடித்தபோது பஸ்சில் யாத்ரீகர்கள் 42 பேர் இருந்துள்ளனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தலைவர் அபு மாத்தன் ஜார்ஜுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். விபத்து குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. உடல்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவதையும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ வசதி வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.