சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்கள் வாயிலாகச் சிறுவர்களைக் குறிவைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 27 வயதுடைய நபர் மீது 596 குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸ் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவுஸ்திரேலியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 459 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் விளக்கமறியலில் உள்ள குறித்த நபரின் மின்னணு சாதனங்களிலிருந்து 23,000-க்கும் மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, இதுவரை 360 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவையும்,ஏனையவர்கள் வெளிநாடுகளையும் (முக்கியமாக ஆங்கிலம் பேசும் நாடுகள்) சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
2018 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்த நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, ஆண் மற்றும் பெண் என இருபாலராகவும் நடித்துச் சிறுவர்களுடன் பழகியுள்ளார். பின்னர் அவர்களை அச்சுறுத்தி அல்லது மூளைச்சலவை செய்து பாலியல் ரீதியான படங்களை அனுப்ப வைத்துள்ளார்.
குயின்ஸ்லாந்து பொலிஸ் திணைக்கள கண்காணிப்பாளர் டென்சில் கிளார்க்,
“பிரபலமான செயலிகள் மற்றும் கேம்கள் மூலம் சிறுவர்கள் அச்சுறுத்தப்பட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது சிறுவர்களுக்கு நீண்டகால மன உளைச்சலை ஏற்படுத்தும். பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களின் இணையப் பயன்பாடு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான 596 முறைப்பாடுக் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் வியாழக்கிழமை (05) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஏனைய பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளம் காணும் பணியில் அவுஸ்திரேலிய பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.