கேகாலை – ஹேனகந்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம்(18) கெஹெல்வத்தை பகுதியிலிருந்து தந்தெனிய பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், ஹேனகந்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 40 வயதுடைய நபர் பலத்த காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணையில் அவர் ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய் எனத் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் காயமடைந்த நிலையில் தற்போது கேகாலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.