அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா சீனாவுடன் “ஒப்பந்தம் செய்தால்” கடுமையான சுங்க வரிகளை விதிப்பதாக மிரட்டும் சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுக்க “எந்த நோக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த சில ஆண்டுகளில் உருவான சில பிரச்சினைகளை சரிசெய்வதே சீனாவுடன் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் நோக்கம்,” என ஞாயிற்றுக்கிழமை காலை ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் கார்னி தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட வர்த்தகப் பொருட்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் (EV), வேளாண் பொருட்கள் மற்றும் மீன்வளப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், கனடா–அமெரிக்கா–மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA) கீழ் உள்ள தனது கடமைகளை கனடா மதிப்பதாக கார்னி கூறினார். அந்த ஒப்பந்தத்தின் படி, சந்தைமுறை இல்லாத நாடுகளுடன்—சீனா போன்றவற்றுடன்—சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர முனைவதாக இருந்தால், மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், டிரம்ப் தனது Truth Social கணக்கில் மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “ஒருகாலத்தில் மகத்தானதாக இருந்த கனடா என்ற நாட்டை சீனா வெற்றிகரமாகவும் முழுமையாகவும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இது வருத்தமளிக்கிறது,” என்று அவர் பதிவிட்டார்.
இந்த பதிவு, கனடா சீனாவுடன் “ஒப்பந்தம் செய்தால்” அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனடியப் பொருட்களுக்கும் 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டியதற்கு அடுத்த நாளில் வெளியானதாகும். இருப்பினும், அவர் தனது சமூக ஊடகப் பதிவில் “ஒப்பந்தம்” என்பதன் பொருளைத் தெளிவாக குறிப்பிடவில்லை.
“சீனா கனடாவை முழுமையாக விழுங்கிவிடும்; அதன் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொதுவான வாழ்வியல் முறைகள் அனைத்தும் அழிவடையும்,” என்றும் டிரம்ப் கூறினார்.
கடந்த வாரம், சீனாவுடன் கனடா ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதன் படி, 49,000 சீன மின்சார வாகனங்கள் 6.1 சதவீதம் என்ற குறைந்த சுங்க விகிதத்தில் கனடிய சந்தையில் அனுமதிக்கப்படும். அதற்குப் பதிலாக, சீனா கனடிய கனோலா மற்றும் பிற பொருட்களுக்கான சுங்க வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டது.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் டிரம்ப் முன்பு வெளியிட்ட கருத்துகளிலிருந்து அவரது சமீபத்திய மிரட்டல் வித்தியாசமாகும். அப்போது அவர் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அந்த ஒப்பந்தம் “ஒரு நல்ல விஷயம்” எனக் கூறியிருந்தார்.
“அதைத்தான் [கார்னி] செய்ய வேண்டும். ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நல்லது. சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கிடைக்குமானால், அதைச் செய்ய வேண்டும்,” என்று அப்போது வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட், டிரம்பின் மிரட்டல் குறித்து சில விளக்கங்களை வழங்கினார். கனடா சீனாவுடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய சுங்க வரிகள் விதிக்கப்படலாம் என அவர் கூறினார்.
டாவோஸில் கார்னி நிகழ்த்திய உரைக்குப் பிறகு எழுந்த முக்கியமான கேள்விகளில் ஒன்று, உலகளாவிய ஆதிக்க சக்திகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நடுத்தர சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரது அழைப்பை நடைமுறைப்படுத்த, கனடா எந்த வகையான தெளிவான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதுதான். புதியதாக விளக்கப்பட்ட இந்த வெளிநாட்டு கொள்கை நோக்கத்தை அடைவதற்கான செயற்பாட்டு வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அனிதா ஆனந்த், ரோஸ்மேரி பார்டன் லைவ் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், இந்தப் பொறுப்பு தன்னிடமும் பிற அமைச்சர்களிடமும் உள்ளதாகத் தெரிவித்தார்.
“ஒரு நடுத்தர சக்தியாக, எங்களது தேசிய நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதே எங்களது நோக்கம். அதற்காக, பல்வேறு விவகாரங்களில் ஏற்கனவே சில நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். உக்ரைன் தொடர்பான ‘விருப்ப நாடுகளின் கூட்டணியை’ (coalition of the willing) எடுத்துக்காட்டாகக் காணலாம்,” என்று அவர் தெரிவித்தார்.