திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால், தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தன் கூட்டணிக்கு கட்சிகளை இழுப்பதற்காக, கூட்டணி ஆட்சி என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதமே இருக்கும் வேளையில், பிரசாரம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சியினர் தொடங்கி விட்டனர். அந்த வகையில், முதல் ஆளாக, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழுவை, காங்கிஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவுடனான பேரத்தை அதிகரிப்பதற்காக, காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு இந்த சந்திப்பை நடத்தியிருக்கலாம் ; ஆனால், தவெகவுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியின் சந்திப்பை, திமுகவினர் எப்படி எடுத்துக் கொள்வர் என்பது போகப்போக தெரியும் என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.