கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தொன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தொடர்பாக அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, கந்தளாய் – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்ஊற்று பகுதியில் வெள்ளிக்கிழமை (06) இரவு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே அதற்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த லொறி சாரதி, இதற்கு முன்னரும் கந்தளாய் – சூரியபுர பகுதியில் ஒரு விபத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்தச் சம்பவத்தையும் இதே ஊடகவியலாளர் அறிக்கையிட்டுள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை (07) காலை கித்துல்ஊற்று விபத்தைப் படம் பிடிக்கச் சென்றபோது, பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்ட சாரதியும் அவரது உதவியாளரும் இணைந்து, தன்னை தாக்கியதாக ஊடகவியலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதல் குறித்து அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.