ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுமார் ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சாலே கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு முன்கூட்டியே முழுமையான தகவல்கள் கிடைத்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தீர்மானிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும், விசாரணைகளுக்குத் தேவையான நபர்களைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.
இங்கு அத்தகைய சட்டபூர்வமான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.