ஈரானில் நிலவி வரும் மக்கள் எழுச்சி இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மொண்ட்ரியல் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்டப் பேரணி நடத்தினர்.
மொண்ட்ரியலின் அட்வாட்டர் (Atwater) மெட்ரோ நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, அமெரிக்க தூதரகம் நோக்கிச் சென்றது.
ஈரானில் நிலவும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகவும், அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஈரான் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் இணையச் சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது.
இதனால் மொண்ட்ரியலில் வாழும் ஈரானிய மக்கள், ஈரானில் உள்ள தங்களது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து விடுத்த அறிக்கையில், ஈரானில் அமைதியாகப் போராடும் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.