எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் விசேட சலுகைகள் பணப்பரிசுகள் அல்லது விளம்பரச் சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மற்றும் லிங்குகள் பரப்பப்படுகின்றன.
இவ்வாறான லிங்குகளைக் கிளிக் செய்யும்போது, அவை உங்களை ஒரு போலி இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக “போயாதின டேடா தானம்” போன்ற பெயர்களில் பொதுமக்களின் தரவுகளைச் சேகரிக்கும் மோசடிகளும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய விளம்பரங்களில் இருந்தோ வரும் லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்.
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து அறிய அந்தந்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை நேரடியாக அணுகுங்கள்.
கடவுச்சொற்கள் அல்லது வங்கி அட்டை விபரங்களை இணையத்தில் பகிரும்போது இரண்டு முறை சிந்தித்துச் செயல்படுங்கள்.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இவ்வாறான பல இணைய மோசடிகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இணையத்தைப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.