உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை (11) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானது. “வெப்பமண்டல வலயங்களிலிருந்து முக்கிய விடயங்கள்” எனும் கருப்பொருளில் நடைபெற்றுவரும் இம்மாநாடு மார்ச் 14ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது.
இலங்கை சரும நோய்கள் மற்றும் அழகியல் மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் மற்றும் ஜேர்மனிய விசேட நிபுணர்கள் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இதில் ஜேர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கையிலிருந்து 150 நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச சரும நோய்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிளயேர் புல்லர், குறைந்த வளங்களைக் கொண்டு இலங்கை சுகாதாரத் துறையில் காட்டும் அதீத வினைத்திறனையும் முன்னேற்றத்தையும் வெகுவாகப் பாராட்டினார். உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள கவனிக்கப்பட வேண்டிய 10 முக்கிய நோய்களில் 7 நோய்கள் வெப்பமண்டல சரும நோய்களுடன் தொடர்புடையவை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சுமார் 4 பில்லியன் மக்கள் சரும நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்மானங்கள் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் இலங்கை சரும வியாதிகள் சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.