2026 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றுவரும் 28வது பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியப் பாராளுமன்றத்திலிருந்துவழங்கப்பட்ட அழைப்பையேற்று இக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
இந்திய மக்களவையின் (லோக் சபா) சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், நான்கு பகுதியளவு தன்னாட்சியான பாராளுமன்றங்கள் உள்ளடங்கலாக 42 பொதுநலவாய நாடுகளின் 61 சபாநாயகர்களும், தலைமைதாங்கும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் சபாநாயகர்களின் பங்கு, பாராளுமன்றத்தின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், பாராளுமன்றத்துடன் பொதுமக்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெறவுளன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கைத் தூதுக் குழுவில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருசித ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.