இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஷ்ய தூதுவருக்கு இங்கு விளக்கமளித்து, மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், சேதடைந்துபோன ரயில் போக்குவரத்துப் பாதைகள், வீதிக் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீள புனர்நிர்மாணம் செய்வதற்கும் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறே, இந்த இக்கட்டான நேரத்தில், இதுவரைக்கும் ரஷ்ய அரசு நல்கிய ஆதரவிற்காக எதிர்க்கட்சித் தலைவர், முழு இலங்கை மக்களின் சார்பாக தமது நன்றிகளை ரஷ்யத் தூதுவர் Mr. Levan Dzhagaryan அவர்களிடம் தெரிவித்துக் கொண்டார்.
நீண்டகால நண்பர்களாக இரு நாடுகளுக்கும் இடையே காணப்பட்டு வரும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்தத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும், வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இது பெரும் உறுதுணையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
By C.G.Prashanthan