மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த ரீ. சாமிளா (வயது 46) என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார்,
சம்பவ தினம் பகல் உணவுக்காக அவர் சவுக்கடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று பகல் உணவை முடித்து விட்டு பிற்பகல் 04.00 மணி அளவில் தனது வசிப்பிடமான நேயம் கிராமத்தை நோக்கி, அவரது சகோதரி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வர, அவரும் அவரது 10 வயது மகனும் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து பயணித்துக் கொண்டு இருந்துள்ளார். அவ்வேளையில், தாமரைக்கேணி நாற்சந்தியை அவர்கள் அடையும் போது, சவுக்கடி கடற்கரை பக்கமாகவிருந்து வேகமாக வந்த பிக்கப் வாகனத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது சகோதரியும் அவரது 10 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பலியான பெண்ணின் சடலம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, பெண்ணும் அவரது சகோதரியும் மகனும் பயணித்த, மோட்டார் சைக்கிளை மோதிய, பிக்கப் வாகனத்தைக் கைப்பற்றிய ஏறாவூர்ப் பொலிஸார் பிக்கப் வாகன சாரதியை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.