வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தடை உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று (08.12.2025) மீண்டும் மூன்றாவது முறையாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரினர்.
இதற்கு மனுதாரர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்ற நிலையில் இவற்றை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வர் தெரிவின் போது பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார் எனவும் குறித்த இருவரும் அப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவுக்குமாறு கோரி இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.