பிராங்பேர்ட் விமான நிலையத்தில் (Frankfurt Airport) போயிங் 787 ஜெட் விமானத்தின் முன் சக்கரம் எதிர்பாராதவிதமாக உடைந்ததில் (collapsed) பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை விமான நிலையத்தின் நுழைவாயில் (gate) பகுதியில் நிகழ்ந்ததாக அந்த விமானத்தை இயக்கும் லுஃப்தான்சா (Lufthansa) நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நோஸ் கியர்’ (nose gear) என்றும் அழைக்கப்படும் இந்த முன் சக்கரம், விமானம் தரையில் நகர்வதற்கும் (taxiing), புறப்படுவதற்கும் மற்றும் தரையிறங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
“பயணிகள் இன்னும் விமானத்தில் ஏறவில்லை” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது விமானப் பணியாளர்களும், தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்களும் (ground staff) விமானத்திற்குள் இருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
“பல ஊழியர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது. இரு எஞ்சின்களைக் கொண்ட அந்தப் பெரிய விமானம் (widebody aircraft) பகுதியளவு தரையில் சாய்ந்திருந்த நிலையில், அதைச் சுற்றி பல அவசரக்கால வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் மதியம் 12:45 மணிக்கு (10:45 GMT) நிகழ்ந்ததாகவும், அந்த ஜெட் விமானம் ‘LH450’ என்ற விமானமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்தது என்றும் லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.
“தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சம்பவத்திற்கான துல்லியமான காரணங்கள் குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம்,” என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
லுஃப்தான்சா நிறுவனம் பயன்படுத்தி வரும் ‘787-9’ ரக போயிங் 787 விமானங்கள், அந்நிறுவனத்தின் குழுமத்தில் ஒப்பீட்டளவில் அண்மையில் சேர்க்கப்பட்ட புதிய வரவாகும். குறைவான செயல்திறன் கொண்ட ஜெட் விமானங்களை படிப்படியாக நீக்கி, தனது விமானக் குழுமத்தை எளிமைப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.